தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் ஆவணங்கள் இடம் பெற்ற ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில், வார இறுதி விடுமுறை காரணமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் வருகை குறைவாக இருந்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அங்குள்ள கணினிகளில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டன. மே 20ஆம் தேதி இதனை கவனித்த உதவி பொறியாளர் மலர்விழி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பின்னரே போலீசில் புகார் அளிக்கப்பட்டு, இந்த விவகாரம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வளர்புரத்தைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் முரளி மனோகர் ஆகிய இருவர் இந்த திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கைதான கோபிநாத் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், மின்வாரிய அலுவலகத்தில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகளை திருடிச் சென்று தனது வீட்டில் மறைத்து வைத்ததாகக் கூறியுள்ளார். பின்னர், அதிலிருந்த டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அனைத்தையும் முழுமையாக அழித்துவிட்டு, பெங்களூருக்கு கடத்திச் சென்றுள்ளார். சந்தையில் தலா ரூ.20,000 மதிப்புள்ள அந்த ஹார்டு டிஸ்க்குகளை வெறும் ரூ.2,500-க்கு விற்பனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதற்குரிய ஆதாரங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டு, தரவுகள் அழிக்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண திருட்டு சம்பவமா அல்லது முறைகேடு வழக்கை திசைதிருப்பவும், ஆதாரங்களை அழிக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா என்ற கோணத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக, வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
