காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளியான தகவலுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் கர்நாடகா பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அமைச்சர்கள் தரப்பில் வரும் தகவல்களின் அடிப்படையில் காவிரி விவகாரத்துக்காகவே அந்த பயணம் இருக்கலாம் என யூகிக்கப்படுவதாகக் கூறினார்.

துரைமுருகன் கூறுகையில், “காவிரி விவகாரத்தில் தற்போது இரு முக்கியப் பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, மாதாந்திர அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்காதது. இரண்டாவது, மேகதாது அணை திட்டம். உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருக்கும் நிலையில், கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவது நீதிமன்ற உத்தரவின் வலிமையை குறைக்கும் அபாயம் உள்ளது” என்றார்.

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு, மத்திய நீர்வள ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் மூலமாகவே தமிழகத்தின் உரிமையை வலியுறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தங்களது ஆட்சிக் காலத்திலும் இதே காரணத்தால் கர்நாடகாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்றும் அவர் நினைவூட்டினார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காத நிலை ஏற்படும் என்று எச்சரித்த துரைமுருகன், இது பல ஆண்டுகளாக நீடிக்கும் மிக முக்கியமான பிரச்சினை என்றார்.

முதலமைச்சர் கர்நாடகா செல்லும் முன்பு சட்டமன்ற எதிர்க்கட்சிகள் அல்லது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஆலோசனை செய்திருக்க வேண்டும் என்றும், அது செய்யப்படாதது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதை சுட்டிக்காட்டிய செய்தியாளருக்கு பதிலளித்த அவர், “அப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு இல்லை. தற்போது தமிழகத்தின் கையில் நீதிமன்ற உத்தரவு இருப்பதால் இரு சூழல்களையும் ஒப்பிட முடியாது” என்றார்.

மாநில அரசின் கடன் பற்றிய கேள்விக்கு, “எந்த அரசும் கடன் வாங்காமல் ஆட்சி நடத்த முடியாது. கடனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்” என்று துரைமுருகன் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version