திருப்பூர் மாவட்டத்தில் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பல்லடம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெருமளவில் கஞ்சா திருப்பூருக்கு கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, திருப்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நிலையத்திற்கு வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன (ஏசி) பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வடமாநில நபரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், மேலும் 2 கிலோ கஞ்சா, ஒரு கைத்துப்பாக்கி, 4 உயிர்த் தோட்டாக்கள் மற்றும் ஒரு பயன்படுத்தப்பட்ட தோட்டா ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மிருதுன் ஜெயரானா, நிரோட் பாக், ராஜ்குமார், சூரியகாந்த் தாஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், கஞ்சா கடத்தலுக்கான தகவல் பரிமாற்றம் வாட்ஸ்அப் மூலம் நடைபெற்றதாகவும், பணப் பரிவர்த்தனைகள் கூகுள் பே வாயிலாக செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். கிடைத்த தகவலின் அடிப்படையில் 24 மணி நேரத்திற்குள் 40 கிலோ கஞ்சா, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், ரயிலின் குளிர்சாதன பெட்டிகளில் பணிபுரியும் உதவியாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மாவட்டம் முழுவதும் 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியான மிருதுன் ஜெயரானா மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தெரிவித்தார்.
