உலகளவில் பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் 50 நகரங்களின் பட்டியலை இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள 205 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வின் முடிவுகள், இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உலகளவில் அதிக வெப்ப அபாயத்தைக் கொண்டுள்ள முதல் 50 நகரங்களின் பட்டியலில், வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு இந்தியாவில் இருந்து மட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது நாக்பூர், மதுரை, போபால், கான்பூர், புனே, பாட்னா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் சென்னை நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

வெப்பத்தின் தாக்கம், அதைத் தாங்கும் மக்களின் வாழ்வாதார நிலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், உலகளவில் மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கக்கூடிய முதல் 10 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் மூன்று நகரங்கள் முன்னணியில் உள்ளன. அந்தவகையில், குஜராத்தின் அகமதாபாத் உலக அளவில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூர் 4-வது இடத்திலும், தமிழகத்தின் பாரம்பரிய நகரான மதுரை 7-வது இடத்திலும் உள்ளன.

ஈராக்கின் ‘அல் பஸ்ரா’ (Al Basrah) நகரம் இப்பட்டியலில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. அதிக அபாயத்தில் உள்ள நகரங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் சகாரா துணை ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளன.  இந்திய அளவில் இந்த வெப்ப அபாயப் பட்டியலில் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே, பாட்னா, போபால், கான்பூர், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களும் தீவிர பாதிப்பு வளையத்திற்குள் உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், “ஒரு நகரத்தின் வெப்ப அபாயம் என்பது அங்குப் பதிவாகும் வெயிலின் அளவை மட்டும் பொறுத்தது அல்ல. அந்த நகரத்தில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார நிலை, காற்றோட்டமற்ற குடிசைப் பகுதிகள், மரங்கள் இல்லாத சூழல் (பச்சை மண்டலக் குறைபாடு) மற்றும் ஏசி போன்ற குளிரூட்டும் வசதிகள் இல்லாத நிலை போன்ற உள்கட்டமைப்பு பலவீனங்களே பாதிப்பைத் தீவிரமாக்குகின்றன” என்று விளக்கியுள்ளனர்.

மேலும், வெப்பத்தைத் தணிக்க ஏசி பயன்பாட்டை மட்டுமே அளவுக்கு அதிகமாக நம்பியிருப்பது, மின்சாரத் தேவையை அதிகரித்து புவி வெப்பமயமாதலை மேலும் ஒரு நச்சுச் சுழற்சியாக (Vicious cycle) மாற்றிவிடும் என்றும், இதற்கு மாற்றாகப் பசுமைப் பரப்பை அதிகரிப்பது மற்றும் இயற்கையான குளிரூட்டும் தொழில்நுட்பங்களை நோக்கி நகரங்கள் மாற வேண்டும் என்றும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version