2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த  முதலமைச்சர்    விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகிறது.

இந்த முடிவால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ள திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கம்யூனிஸ்ட்டுகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவளித்ததன் பின்னணியில் உள்ள நியாயங்களையும், தங்களின் அரசியல் நிலைப்பாட்டையும் விரிவாக  விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆளுநரின் இழுபறியும் இடதுசாரிகள் முன்னிருந்த வாய்ப்புகளும்

”அறுதிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், தவெக 108 இடங்களை மட்டுமே பெற்றிருந்ததால், பெரும்பான்மை ஆதரவுக் கடிதம் இன்றி ஆட்சி அமைக்க ஆளுநர் முதலில் முட்டுக்கட்டை போட்டார். பெரும்பான்மையை ஆளுநர் மாளிகையில் அல்ல, சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வழிகாட்டியாக இருந்தபோதும் இந்த இழுபறி நீடித்தது. இத்தகைய இக்கட்டான சூழலில் சிபிஐ(எம்) மாநிலக்குழுவின் முன் மூன்று வாய்ப்புகளே இருந்தன.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது, திமுகவின் மறைமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க வழிவகை செய்வது, எவரும் பெரும்பான்மை நிரூபிக்காமல் போனால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமையவிடுவது அல்லது உடனடியாக மற்றொரு தேர்தலைச் சந்திப்பது.

குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் அனுமதிக்கக் கூடாது?

மறுதேர்தலைச் சந்திக்க எந்தவொரு கட்சியும் தயாராக இல்லாத நிலையில், ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டைத் தங்களின் மறைமுகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைக்கும் ஒன்றிய பாஜக அரசின் திட்டத்திற்கு எக்காரணத்தைக் கொண்டும் வழிவகுத்துவிடக் கூடாது என்பதில் கம்யூனிஸ்ட்டுகள் உறுதியாக இருந்தனர். நடந்து முடிந்த தேர்தலின் முதன்மை நோக்கமே பாஜக – அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்பதுதான்; அந்த நோக்கத்தை மக்கள் தங்களின் தீர்ப்பின் மூலம் நிறைவேற்றியுள்ளனர். எனவே, தோற்றுப்போன ஒரு கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் என்பதால் ‘அதிமுக – திமுக கூட்டு’ என்ற யோசனையை சிபிஐ(எம்) முற்றிலுமாக நிராகரித்தது.

மக்களின் தீர்ப்பும் தவெகவின் உறுதிமொழியும்

தமிழகத்தின் சுமார் 1.72 கோடி வாக்காளர்கள் திமுக, அதிமுக அல்லாத ஒரு “புதிய மாற்று சக்தி” ஆட்சிக்கு வர வேண்டும் என்றே தவெகவிற்கு வாக்களித்துள்ளனர். நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளைப் போலத் தமிழ்நாட்டிலும் இளைஞர்களின் இந்த எழுச்சியை இடதுசாரிகள் மதிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சியின் மீதிருந்த அதிருப்தி, லஞ்சம், ஊழல், கனிம வளக் கொள்ளை மற்றும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றிற்கு எதிராகவே மக்கள் இந்த ஆட்சி மாற்றத்தைத் தந்துள்ளனர்.

மேலும், தவெக அளித்த கடிதத்திலும், நேரடிச் சந்திப்பிலும் “மதச்சார்பின்மைக் கொள்கையில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம்; அனைவருக்கும் நேர்மையான ஆட்சியைத் தருவோம்” என உறுதி அளித்துள்ளனர். அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்ததன் மூலம், சிபிஐ(எம்) குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதைத் தடுத்து, மக்களாட்சியைக் காப்பாற்றியுள்ளது.

முன் அனுபவ விமர்சனங்களுக்கான பதில்

விஜய் ஒரு நடிகர், அவருக்கு அரசியல் முன் அனுபவம் இல்லை என்று விமர்சிப்பவர்களுக்கு வரலாறுதான் பதில். அன்று எம்.ஜி.ஆர், என்.டி.ராமாராவ் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும் இதே விமர்சனங்கள் எழுந்தன, ஆனால் மக்கள் அதை நிராகரித்தனர். புதியவர்கள் என்பதால், மக்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள நல்ல முறையில் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற அக்கறையும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் தவெகவிற்கு கூடுதலாகவே இருக்கும்.

புதிய ஆட்சியின் முன்னுள்ள சவால்களும் சிபிஐ(எம்)-ன் பார்வையும்

புதிதாக அமைந்துள்ள தவெக அரசுக்கு பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைவது, கௌரவமான நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்குவது, லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகத்தை வழங்குவது, மற்றும் மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவது போன்ற பல சவால்கள் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவிதமான மாயையும் கிடையாது. தவெக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் சட்டங்களையும் நிறைவேற்றினால் சிபிஐ(எம்) அதனை முழுமையாக வரவேற்கும், ஆதரிக்கும். அதேநேரத்தில், மக்களுக்குப் பாதகமான அல்லது அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதனை வீதிகளில் இறங்கி எதிர்த்துப் போராடவும் இடதுசாரிகள் தயங்க மாட்டார்கள் என்பதே தற்போதைய தெளிவான நிலைப்பாடாகும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version