தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் இந்த முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பித்தார். பட்ஜெட் தயாரிப்புக்கு முன்பே முதலமைச்சர் விஜய் அனைத்துத் துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கடந்த ஜூலை மாதம் விரிவான ஆலோசனைகளை நடத்தினார்.
ஒவ்வொரு துறையிலும் நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளின் நிலையை விரிவாக அறிக்கையாகச் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். மாநிலத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு முக்கியத் திட்டங்களைத் தேர்வு செய்தார். இந்தப் பட்ஜெட்டின் சிறப்பம்சமாக சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் ‘வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம்’ அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு முன் தவெக அளித்த வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகளுக்கு 60 வயது வரை மாதம் ரூ.2,500 வழங்கும் மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு ஆறு இலவச கேஸ் சிலிண்டர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் போன்றவை இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த அளவுக்கு இடம்பெறும் என்பதில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. நிதி அமைச்சர் மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையைத் தொடங்கினார். முதலமைச்சர் விஜய் இந்தப் பட்ஜெட் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்று முன்கூட்டியே வலியுறுத்தியிருந்தார். மாநிலத்தின் வளர்ச்சி, சமூக நலன் மற்றும் வாக்குறுதி நிறைவேற்றம் ஆகியவற்றை மையப்படுத்திய அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

