தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆன்லைன் முன்பதிவு திட்டம் நாளை (வியாழன்) முதல் அமலுக்கு வருகிறது. Tasmace2e.in என்ற புதிய இணையதளம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் தற்போதைய மதுபான இருப்பை பார்வையிட்டு, விரும்பும் பிராண்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இணையதளத்தில் முதலில் லாக்-இன் செய்து, தங்கள் வயது 21 அல்லது அதற்கு மேல் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகு 5 கி.மீ. அல்லது 25 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகள், கடை எண் அல்லது மாவட்டம் அடிப்படையில் தேடி, பிடித்த மதுபானத்தை தேர்வு செய்து ஆன்லைனில் பணம் செலுத்தலாம். ஆர்டர் முடிந்ததும் QR கோட் உருவாகும். இந்த QR கோட்டை 21 வயதுக்கு மேற்பட்ட எவரும் கடைக்கு எடுத்துச் சென்று காட்டினால், எம்.ஆர்.பி. விலையிலேயே மதுபானத்தை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் இருந்தபடியே திருநெல்வேலி கடையில் ஆர்டர் செய்வதும் சாத்தியம். இருப்பு விவரங்கள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். தேர்ந்தெடுத்த மதுபானம் கிடைக்காவிட்டால் பணம் திரும்ப வழங்கப்படும் அல்லது வேறு கடையில் வாங்கும் வசதி உண்டு. இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயங்கும். ஒவ்வொரு மதுபானத்தின் எம்.ஆர்.பி. விலை, சப்ளையர் விவரங்கள் மற்றும் கடைக்குச் செல்லும் வழிகாட்டியும் கிடைக்கும். இது அதிக விலை வசூல் மற்றும் குறிப்பிட்ட பிராண்டுகளை மட்டும் தள்ளுபடி செய்யும் நடைமுறையைக் கட்டுப்படுத்த உதவும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரெயில்டெல் குழுமம் உருவாக்கிய இந்த அமைப்புக்கு மாவட்ட அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படலாம் என்றாலும் காலப்போக்கில் சரிசெய்யப்படும். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஆன்லைன் விற்பனையுடன் வீட்டுக்கு டெலிவரி உள்ள நிலையில், தமிழகத்தில் சுயமாகப் பெற்றுக்கொள்ளும் முறை அறிமுகமாகிறது.

மதுவிலக்கு கோரும் குரல்கள் இருக்கும் நிலையில், இந்த புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு எழ வாய்ப்புள்ளது என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு வசதியையும் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version