சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த நீதிபதிகள் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 15 புதிய நீதிபதிகளை நியமித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் நீதிமன்றத்தின் பணிச்சுமை குறைந்து, நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக முடிவுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 75. இதில் இதுவரை 51 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், 24 இடங்கள் காலியாக இருந்தன. இந்த காலி இடங்களை நிரப்பும் நோக்கில், சென்னை உயர்நீதிமன்ற கொலீஜியம் மாவட்ட நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 19 பேரின் பெயர்களைப் பரிந்துரை செய்தது. உச்சநீதிமன்ற கொலீஜியம் இதனை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு அனுப்பியது.

மத்திய அரசு ஆய்வு செய்து 15 பேருக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 9 இடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள்: கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதி, ரமேஷ் நடராஜன், ஜி.கே. முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன். கூடுதல் நீதிபதிகளாக ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என். குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர்.

இந்த நியமனத்தை வரவேற்று தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீதியின் மாண்பையும் அரசியலமைப்பின் விழுமியங்களையும் உயர்த்திப் பிடித்து, அனைவருக்கும் சமநீதியும் சமூகநீதியும் கிடைக்கும் வகையில் புதிய நீதிபதிகளின் பணி சிறக்க வேண்டும் என அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறை நிர்வாகத்தில் இது முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. காலி இடங்கள் நிரப்பப்படுவதால் வழக்கு தேக்கம் குறையும் என சட்ட வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version