சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தொல்லை கொடுத்து வருவது தொடர்பாக, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துச் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மேயர் பிரியா அளித்துள்ள புகாரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அதிகாரப்பூர்வ அலுவலக எண்ணிற்கும், தனிப்பட்ட தொலைபேசி எண்ணிற்கும் தொடர்ந்து தொடர்பு கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொந்தரவு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் தன்னை பற்றித் தவறான தகவல்களையும், அவதூறான கருத்துக்களையும் சித்தரித்துப் பரப்பி வருவதாகவும், இதனால் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இப்புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் ஆணையர், உடனடியாக இது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு சென்னை சைபர் கிரைம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மேயருக்குத் தொல்லை கொடுத்த தொலைபேசி எண்கள், வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் அவதூறு பரப்பப்பட்ட சமூக வலைதளக் கணக்குகளின் ஐபி (IP Address) முகவரிகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version