சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சீன நிலநடுக்க வலைப்பின்னல் மையம் வெளியிட்ட தகவலின்படி, காலை 11:16 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான முதல் அதிர்வும், அதன் 18 நிமிடங்களுக்குப் பின்னர் 11:34 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது அதிர்வும் பதிவாகியுள்ளன.

இரண்டு நிலநடுக்கங்களும் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில், சிங்ஹை மாவட்டத்தில் மையம் கொண்டிருந்தன. உயரமான மலைத் தொடர்கள் நிறைந்த, மக்கள் தொகை மிகவும் குறைவான பகுதியாக கிங்ஹாய் அறியப்படுகிறது. மாகாணத் தலைநகரான சினிங்கிலிருந்து சுமார் 244 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பகுதி, ஹிமாலயத் தொடர்ச்சியின் ஒரு பகுதியான திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம்.

அதிர்வுகளின் தாக்கம் அண்டை மாகாணமான கான்சுவின் தலைநகரான லான்சூ வரை உணரப்பட்டது. அங்கு வீடுகளில் விளக்குகள் ஆடியதுடன், மலைப்பாறைகளிலிருந்து புழுதி மேகங்கள் எழுந்து மக்களை அதிர்ச்சியடையச் செய்தன. பலர் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

இதுவரை உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான கட்டிடச் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது ஒழுங்கு சீராக உள்ளதாகவும், அவசர மீட்புப் படைகள் உடனடியாக நிலநடுக்கப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தொடர் நில அதிர்வுகளை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியின் புவியியல் அமைப்பு காரணமாக சீனாவின் இந்தப் பகுதிகள் எப்போதும் நிலநடுக்க அபாயத்தில் உள்ளன. கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போதைய அதிர்வுகள் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. உள்ளூர் நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, தேவையான உதவிகளை உடனடியாக வழங்க தயாராக உள்ளது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version