நீட் விவகாரம் தொடர்பாக CJP போராட்டத்தையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதி, ராஜீவ் சௌக், படேல் சௌக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட், புதுடெல்லி உள்ளிட்ட மத்திய டெல்லி பகுதியில் உள்ள 18 மெட்ரோ இரயில் நிலையங்களை டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்காலிகமாக மூடியிருந்தது. இதனால் அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்தநிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் போராட்டக் குழுவினர் நடத்திய 3-ம் கட்டப் பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டன. மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

போராட்டம் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, டெல்லி மெட்ரோ அமைப்பின் அனைத்து நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் பயணிகள் சேவைக்காக முழுமையாகத் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது ‘X’ பக்கத்தில்,  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version