தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மாநில நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு நாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் மாநாடு வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

மாநாட்டின் முதல் நாளான ஜூன் 29 காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இதில் சட்டம்-ஒழுங்கு நிலை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு திட்டம், பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களின் நலன், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, முதியோர் நலன், சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது, அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் முதலமைச்சர் தனிப்பட்ட ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். இதில், 28 அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்கு ஆவணத்தில் இடம்பெற்றுள்ள இலக்குகளை மாவட்ட அளவில் விரைவாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஜூன் 30 அன்று, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் பசுமை தமிழ்நாடு திட்டம், வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு, வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துதல், மனிதர்–வனவிலங்கு மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விரிவாக ஆலோசிக்க உள்ளார்.

இதற்கான முன்னோட்டமாக, ஜூன் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தலைமைச் செயலாளர் சாய் குமார் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள அம்சங்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து, துறைவாரியான அறிக்கைகள் பரிசீலிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version