நீட் உள்ளிட்ட தேர்வு வினாத்தாள் முறைகேடு தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் நிகழ்ந்த தடியடி சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது, துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் கலைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறை தடியடி நடத்தியதிலும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதிலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் லேடி ஹார்டிஞ்ச் மற்றும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காவல்துறையின் இந்த அத்துமீறல் மற்றும் தீவிர நடவடிக்கை குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு முன்பாக வழக்கறிஞர் தரப்பில் முறையிடப்பட்டு, வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், நீதிமன்றத்தை இதில் இழுக்க வேண்டாம்; இந்த மனு வழக்கமான நடைமுறைப்படி நாளைய தினம் விசாரணைக்கு வரும், எனக் கூறி, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மறுத்துவிட்டனர்.

அதேவேளையில், போராட்டத்தின் போது வன்முறை, கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி டெல்லி காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version