கோவை மதுக்கரை பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்களை ஆயுதங்களால் மிரட்டி கொள்ளையடித்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை, மதுக்கரை பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 3 பேர் வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 15-ம் தேதி இரவு, அவர்கள் வீட்டின் முன்புறம் அமர்ந்து கைப்பேசியில் கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆயுதங்களுடன் வந்த கும்பல், அவர்களை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் இழுத்துச் சென்று மிரட்டியுள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல், மேலும் 4 பேரை வரவழைத்து ஊழியர்களைக் கடுமையாக மிரட்டியது. அப்போது, தாக்குதல் நடத்தி ஊழியர் ஒருவரின் தலையில் தோசைக்கல்லால் தாக்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த 4 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி மற்றும் விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினர்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், மதுக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், மதுக்கரை அருகே பதுங்கியிருந்த 8 பேரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட மடிக்கணினி, கைப்பேசிகள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version