தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை (ஜூன் 29) IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு நடைப்பெற உள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் மாநிலம் முழுவதிலும் இருந்து IAS, IPS மற்றும் IFS அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் உயர்மட்ட மாநாடு, நாளை (ஜூன் 29) மற்றும் நாளை மறுதினம் (ஜூன் 30) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற உள்ளது.

நாளை (ஜூன் 29) காலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இதில், சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு திட்டம், பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் நலன், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, முதியோர் நலன், சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது, அனைத்து மதங்களின் வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் முதலமைச்சர் விஜய் தனியாக ஆலோசனை நடத்துகிறார். இதில், 28 துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் “வெற்றிக் தமிழகம்”தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 30 அன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து IFS அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், பசுமை தமிழ்நாடு திட்டம், வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு, வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது, மனித–விலங்கு மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இறுதியாக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் விஜய் பரிசு வழங்கி சிறப்பிக்க உள்ளார். தவெக தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு முதல் முறை கூடும் IAS, IPS, IFS அதிகாரிகள் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version