காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்காக கர்நாடகா செல்லவிருக்கும் தமிழக முதல்வர் விஜய், தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய பெ. சண்முகம், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் கர்நாடகா செல்லும் முடிவை கடுமையாக விமர்சித்தார்.

காவிரி விவகாரத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை உறுதி செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அந்தத் தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் நிலையில், கர்நாடகாவுடன் தனியாக இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை பலவீனப்படுத்தும் என்று தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் கர்நாடகா செல்வது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் எடுத்துள்ள சட்டப்பூர்வ நிலைப்பாட்டை தளர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு எந்த வகையிலும் இடம் கொடுக்கக் கூடாது.

மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் விரிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அந்த நிலைப்பாட்டை தமிழக அரசு தொடர்ந்து உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டுக்கான காவிரி நீரைப் பெறுவதில் எந்த தயக்கமும் இருக்கக் கூடாது. கர்நாடகாவிடம் இருந்து நீரைப் பெற சட்டரீதியான வழிமுறைகளையே தொடர்ந்து பின்பற்றுவது சிறந்தது.

எனவே, கர்நாடகா பயணத் திட்டத்தை தமிழக முதல்வர் கைவிட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் சட்ட வழிகளின் மூலமும் காவிரி உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version