தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு விவாதம் இப்போது பற்றியெரிகிறது. “தமிழகத்தில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக முடியுமா?” என்ற கேள்வி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் இன்றைய பேட்டி மற்றும் அறிக்கைக்குப் பிறகு பொதுவெளியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பதற்கு முன்னதாக, திருமாவளவனை முதல்வராக்கச் சில கட்சிகள் முயன்றதாக எழுந்த செய்திகளும், அதற்கு அவர் அளித்த விளக்கமும் தமிழக அரசியலின் ஆழமான வேரூன்றிய சமூகச் சிக்கல்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளன.
திருமாவளவனின் வேதனை
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் விசிக தலைவர் திருமாவளவன். அதிமுக, திமுக மற்றும் சில கூட்டணி கட்சிகள் இணைந்து உங்களை முதலமைச்சராக முயன்றதாக கூறப்பட்டதே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், அதிகாரபூர்வமாக அப்படி ஒரு தகவல் இரு கட்சிகளிடமும் இருந்து வரவில்லை என மறுத்தார்.
இந்த நிலையில்தான், இந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்ட திருமாவளவன், ”தமிழ்நாட்டில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை. உ.பி., ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார், பஞ்சாப் மாநிலங்களில் தலித்துகள் முதல்வராக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூற்றாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.தலித் சமூகத்தைச் சேர்ந்த நான் முதல்வராவேன் என ஒரு பேச்சு சொல்லப்பட்டது. என்னை முதல்வராக்க காங்கிரஸ் முறியடித்து விட்டதாக பரவும் தகவல் பொய்யானது.திமுகவோ, அதிமுகவோ அதிகாரப்பூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. பிறிதொரு பொருளைத் தரும் உள்நோக்கத்தோடு செய்திகளை பரப்புவது வேதனையளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை… இன்னும் ஒரு நூற்றாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்” என்ற அவரது வரிகள், வெறும் அரசியல் விரக்தி மட்டுமல்ல; அது தமிழகத்தின் சமூக நீதிக் கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளைச் சுட்டிக்காட்டும் ஒரு கசப்பான உண்மையும் கூட.
வழி காட்டும் பிற மாநிலங்கள்
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, சமூக நீதிப் போர்க்களமாகத் திகழும் தமிழகம் இந்த ஒரு விஷயத்தில் பின்தங்கியே இருக்கிறது என்பதைத் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி நான்கு முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஒரு தலித் தலைவரால் அதிகாரத்தின் உச்சத்தைத் தொட முடியும் என்பதை நிரூபித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி நான்கு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் தாமோதரம் சஞ்சீவையா 1960ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்று, இந்தியாவின் முதல் தலித் முதலமைச்சர் என்ற வரலாற்றைப் படைத்தார். மகாராஷ்டிராவில் சுஷில்குமார் ஷிண்டே முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். பீகாரில் போலா பாஸ்வான் சாஸ்திரி, ராம் சுந்தர் தாஸ் மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோர் முதலமைச்சர் பதவியை வகித்துள்ளனர். பஞ்சாபில் சரஞ்சித் சிங் சன்னி எனப் பட்டியல் நீள்கிறது. ஆனால், பெரியார் பிறந்த மண்ணில், சமூக நீதி பேசும் திராவிட அரசியலின் மையப்புள்ளியில், ஒரு தலித் முதலமைச்சர் என்பது இன்றுவரை விவாதப் பொருளாக மட்டுமே இருப்பது ஏன்?
தமிழகக் கட்சிகளிடம் மாற்றம் வேண்டுமா?
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டும் சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டவை. இருப்பினும், தேர்தல் என்று வரும்போது “வெற்றி வாய்ப்பு” (Winnability) என்ற பெயரில் சாதி பலம் கொண்ட தொகுதிகளில் அந்தந்த சாதி வேட்பாளர்களையே நிறுத்தும் போக்கு இன்னும் மாறவில்லை.”ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கத்தை திருமாவளவன் முன்வைக்கும்போது, அதை ஒரு நெருக்கடியாகவே திராவிடக் கட்சிகள் பார்க்கின்றன. அமைச்சரவையில் ஓரிரு இடங்களை ஒதுக்குவதைத் தாண்டி, அதிகாரத்தின் உச்சத்தை ஒரு விளிம்புநிலைத் தலைவருக்கு வழங்கத் தமிழகக் கட்சிகள் இன்னும் துணியவில்லை.தலித் அல்லாத பிற சமூகங்களின் வாக்குகள் பறிபோய்விடுமோ என்ற அச்சமே, தலித் தலைவர்களை முன்னிறுத்துவதில் கட்சிகளுக்கு இருக்கும் பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.
நிலைமை மாறுமா?
திருமாவளவன் கூறியது போல “நூறு ஆண்டுகள் ஆகும்” என்ற நிலை மாற வேண்டுமானால், அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையிலும் மாற்றம் தேவை.
குறியீட்டு அரசியலைத் தாண்டி ஒருவரைத் துணை முதலமைச்சராகவோ அல்லது முக்கியமில்லாத துறைகளின் அமைச்சராகவோ ஆக்குவது உண்மையான சமூக நீதி ஆகாது. கொள்கை முடிவெடுக்கும் அதிகாரமிக்க இடங்களில் தலித் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.
தலித் தலைவர்கள் தனித்தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற எழுதப்படாத விதியை உடைத்து, பொதுத் தொகுதிகளிலும் அவர்களை நிறுத்தி வெற்றி பெற வைக்கும் துணிச்சல் கட்சிகளுக்கு வர வேண்டும் இன்றைய இளைஞர்கள் சாதியக் கட்டமைப்புக்கு அப்பாற்பட்டுச் சிந்திப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சிந்தனை தேர்தல் களத்திலும் பிரதிபலிக்க வேண்டும். ஒரு தலைவரின் தகுதியை அவரது சாதியைக் கொண்டு அளவிடாமல், அவரது திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டு அளவிடும் முதிர்ச்சி வாக்காளர்களுக்கு வர வேண்டும்.
“பதவிக்காக நான் முடிவெடுக்கவில்லை, விளிம்புநிலை மக்களின் எதிர்காலத்திற்காகவே முடிவெடுத்தேன்” என்று திருமாவளவன் கூறுவது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது. ஆனால், ”தமிழகம் தயாராக இருக்கிறதா? ” என அவர் எழுப்பியுள்ள கேள்வி ஒவ்வொரு தமிழனும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.
சமூக நீதி என்பது வெறும் மேடைப் பேச்சாக மட்டும் இல்லாமல், அதிகாரப் பகிர்விலும் உண்மையாகப் பிரதிபலிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு தலித் முதல்வர் என்பது “நூற்றாண்டு கனவாக” இல்லாமல், “அடுத்த தசாப்தத்தின் நிஜமாக” மாற வேண்டுமானால், தமிழகக் கட்சிகளின் அணுகுமுறையிலும், சமூகத்தின் மனநிலையிலும் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ வேண்டியது காலத்தின் கட்டாயம்!
– பா. முகிலன்
