நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கரப்பான் பூச்சி கட்சியைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவசர ஆலோசனைக்காக சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சந்திப்பின் விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், உயர் மட்ட அரசியல் வட்டாரங்கள் இதை முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கின்றன.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால் பல மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும், பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போராட்டக்காரர்கள் “நீட் ரத்து செய்!”, “தேர்வு முறைகேடு ஒழிக!” போன்ற முழக்கங்களை எழுப்பி, அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகக் கூறுகின்றனர். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவ சமூகத்திடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், அரசின் இந்த அணுகுமுறை போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் என அஞ்சப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version