நண்பனின் மரணத்தால் பாதிக்கப்பட்ட +2 மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பாலக்கோடு அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பட்றஅள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், அமானிமல்லாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாணவி வீட்டில் திடீரென தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவியின் பள்ளி புத்தகத்தில் உருக்கமான கடிதம் ஒன்று இருந்ததைக் கைப்பற்றினர்.
அதில், “தன்னுடன் படித்த மாணவன் ஒருவர் நண்பனாக இருந்தார். அவர் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார். இதனால் நான் இந்த உலகில் வாழ விரும்பவில்லை. நானும் உன்னை காண வருகிறேன்” என எழுதப்பட்டிருந்தது.
நண்பன் இறந்துவிட்டதால் வாழ விரும்பவில்லை என கூறி பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
