தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரான பின்னர், பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் நேரம் கேட்டதாகவும், ஆனால் அதிமுகவில் அப்போது நிலவிய குழப்பம் காரணமாக விஜய் சந்திக்க எடப்பாடி தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் தமிழக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் புதிதாக அமைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, சிடிஆர் நிர்மல்குமார் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்தார்.
“விஜய் தரப்பிலோ, தவெக அலுவலகத்திலிருந்தோ, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க எந்தவித கோரிக்கையும் வைக்கப்படவில்லை. யாரோ சில அதிமுக தலைவர்களிடம் பேசியதாக கூறப்படுவதும் உண்மையல்ல” என்று தெரிவித்தார்.
மேலும், “இளைஞர்களிடம் சமூக வலைதளங்கள் மற்றும் சினிமா பாணி பிரசாரங்கள் மூலம் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி விஜய் வெற்றி பெற்றுள்ளார். அது நீண்டகால அரசியல் உழைப்பின் பலன் அல்ல. மாற்றத்தை விரும்பிய ஒரு பகுதி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர்” என்றும் விமர்சித்தார்.
விஜயின் சமீபத்திய அரசியல் பேச்சுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “முதல்வர் பதவியில் இருப்பவர் சினிமா வசன பாணியில் பேசாமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும். கைதட்டுபவர்களை மட்டும் பார்க்காமல், முகம் சுழிப்பவர்களையும் கவனிக்க வேண்டும்” என கூறினார்.
