அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் உயிர்நீத்த தஞ்சாவூர் மாவட்டம் பாலூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி மகேந்திரன் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை  அ.இ.அதிமுகவே  ஏற்றுக்கொள்ளும்.

மேலும், அவரது குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூ. 30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும்.

என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே… தயவு செய்து பொறுமையாக இருங்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்.

“அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது. அன்புத் தம்பி K.S. மகேந்திரன் அவர்களின் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம். நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்!

தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் அவர்களின் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version