பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பாமக இன்று இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. ஒரு பக்கம் ராமதாஸ், இது நான் ஆரம்பித்த கட்சி, எனது கடைசி மூச்சு வரை நான் மட்டுமே தலைவராக இருப்பேன் எனக் கூறி வருகிறார். இன்னொரு பக்கம் அன்புமணி, பாமக பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவு படி தானே தலைவர் என்று கூறி வருகிறார்.
இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு சென்ற போது, பாமக தலைவராக 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணியே தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனால் பாமக பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு சொந்தமானது.
இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணி தான் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பாமகவில் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளோம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் உட்கட்சி பிரச்னை எழுவதற்கு முன்பு தரப்படும் அடிப்படையில் அதனை அங்கீகரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தலைமை தேர்தல் ஆணையத்தின் வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
