சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் பூசும் பணிகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பமாக, மலையாள நடிகர் ஜெயராமை அமலாக்கத் துறை (ED) விசாரணைக்கு அழைத்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே கேரள காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழு (SIT) நடிகர் ஜெயராமை சாட்சியாக விசாரித்திருந்த நிலையில், தற்போது பணப்பழிவழக்கு தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத் துறையும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜெயராமிடம் விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் பொட்டிஎன்பவருடன் ஜெயராமுக்கு இருந்த தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெறவுள்ளது. குறிப்பாக, சென்னையில் நடிகர் ஜெயராமின் வீட்டில் நடைபெற்ற ஒரு பூஜையில் சபரிமலை தங்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் குறித்து அமலாக்கத் துறை விளக்கம் கேட்க உள்ளது.
இதுகுறித்து நடிகர் ஜெயராம் கூறுகையில்,
“தான் முழுமையாக பக்தி உணர்வோடு மட்டுமே செயல்பட்டதாகவும், தங்கம் தொடர்பான எந்த விதமான முறைகேடும் தன்னுக்கு தெரியாது” என்றும் முன்பே விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், சபரிமலை தங்கம் பூச்சு முறைகேட்டில் பணப்பாதைகள், தங்கம் மாற்றம், சட்டவிரோத பரிமாற்றங்கள் போன்றவை நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) அறிவியல் ஆய்வில், கோவில் தங்கத்தில் கலப்படம் மற்றும் மாற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
