அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. இளவரசன், கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்று இளவரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் கடும் புயலை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அ.தி.மு.க.வில் நிலவும் உள்கட்சி சலசலப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய தொண்டர்கள் கட்சியை விட்டு விலகும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி. திருச்சி ஆ.இளவரசன் தனது பதவிகளிலிருந்து விலகியுள்ளார். தனது விலகல் முடிவை அவர் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இணைந்து பணியாற்றி வரும் இளவரசன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆசியால் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். கடந்த 42 ஆண்டுகளாக எந்தச் சூழலிலும் கட்சியை மாற்றாமல், கட்சி பிளவுபட்ட காலங்களிலும் தனது அணியை மாற்றாமல் விசுவாசத்துடன் பணியாற்றியவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக “துடுப்பு இல்லாத படகு” போல் அல்லாடுவதாகவும், லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் இளவரசன் தனது கடிதத்தில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தபோது மிகுந்த நம்பிக்கை இருந்ததாகக் கூறிய அவர், அந்த நம்பிக்கை நிலை குலைந்து போனதற்கு கட்சித் தலைமையின் நடவடிக்கைகளே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அனைத்து தேர்தல்களிலும் உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் இடமில்லாமல் போனது. பணம் மற்றும் புதியவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக அதிமுக தொடர்ச்சியாக 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது” என்று இளவரசன் தெரிவித்துள்ளார். மேலும், தோல்விக்கான காரணங்களை ஆராயாமல், பொறுப்பேற்காமல், மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளை புறக்கணித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“எதிர்க்கட்சியான திமுகவின் ஆதரவுடன் முதலமைச்சர் பதவிக்கு துணிந்தது கொடுமை” என்று சாடிய இளவரசன், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து மனவேதனையுடன் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விலகல் அதிமுகவுக்குள் ஏற்கெனவே நிலவும் அசௌகரியத்தை மேலும் அதிகரிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஜெயலலிதா காலத்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சியில் இருந்து விலகும் போக்கு அதிகரித்து வருவது, கட்சியின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இளவரசனின் விலகல் அதிமுகவில் புதிய புயலை கிளப்பும் வாய்ப்பு உள்ளது.
