விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டத்தில் அமைச்சர்  முகமது பர்வேஸ், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தேரை வடம்பிடித்து வழிபாடு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறுபடை வீடுகளுக்கு நிகரான புகழ்பெற்ற விராலிமலை முருகன் கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 30) வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த சில நாட்களாக வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிம்ம வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் உச்சகட்டமான இன்று, அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் ஆகியோர் அருகருகே நின்று, தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” கோஷத்தை முழங்க, பக்திப் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேர் மலையடிவாரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது. இவ்விழாவையொட்டி அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version