விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்குள்ள பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில்,
கோப்பையநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு உற்பத்தி ஆலையில் இன்று மதியம் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக வேதிப்பொருட்கள் தீப்பற்றி எரிந்து, அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.
இந்த வெடி விபத்தின் தாக்கம் காரணமாக ஆலை வளாகத்தில் இருந்த 4-க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. தகவலறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆலைக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டே இருந்ததால், உடனடியாகத் தீயைக் கட்டுப்படுத்துவதில் மீட்புக் குழுவினருக்கு பெரும் சவால்கள் ஏற்பட்டது. எனினும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு, பல மணி நேரம் போராடித் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு,
இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில், மீட்புப் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
