மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் த்ரெட்ஸ் உள்ளிட்ட பிரபல சமூக வலைத்தளங்கள் உலகம் முழுவதும் சுமார் 350 கோடி பயனர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் இந்த செயலிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், இன்று மதியம் திடீரென இந்த சேவைகளில் பெரும் கோளாறு ஏற்பட்டது. இந்தியா உட்பட பல நாடுகளில் பயனர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து தானாக லாக் அவுட் ஆவது, புதிய பதிவுகள் ஏற்கப்படாமல் இருப்பது, தொடர்ச்சியான எரர் மெசேஜ்கள் வருவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இந்த திடீர் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கானோர் சமூக ஊடகங்களில் புகார் பதிவு செய்தனர்.
மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “தகவல் மையங்களுக்கு இடையேயான தொடர்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சிக்கல் உருவாகியுள்ளது. சில மணி நேரங்களில் சேவை முழுமையாக சரிசெய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இடையூறுக்கு வருத்தம் தெரிவித்து பயனர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது. குறிப்பாக, மொபைல் போன்கள் மூலம் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், டெஸ்க்டாப் கணினிகள் (சிஸ்டம்) வழியாக அணுகுபவர்களுக்கு மட்டுமே இந்த சிக்கல் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடங்கல் காரணமாக வணிக நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் தகவல் பரிமாற்றம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் இன்று உலகளாவிய தகவல் தொடர்பின் முக்கிய அங்கமாக மாறியுள்ள நிலையில், இத்தகைய திடீர் கோளாறுகள் பயனர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, டிஜிட்டல் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. மெட்டா நிறுவனம் விரைவில் சேவையை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
