அதிமுகவில் நிகழ்ந்த குழப்பங்களுக்கு அக்கட்சியில் புதிதாக இணைந்து  லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டின்தான் காரணம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் தன் மீது பரப்பப்பட்ட கட்டுக்கதைகள் பொய்த்துப் போனதாக லீமா ரோஸ் மார்ட்டின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கழகம் ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

சமீப காலமாக தன்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போனதாகவும்,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால்  உருவாக்கப்பட்டு, இதய தெய்வம் அம்மாவால்  செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை எனவும் கூறியுள்ள லீமா ரோஸ் மார்ட்டின்,

தன் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தது முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது தன் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுவதாகவும்,

தனது தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே தன்னுடைய முதன்மை கடமையாக எண்ணுவதாகவும்,

தமிழ்நாட்டில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி மலர்ந்திட கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அயராது பாடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version