திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பழைய பேட்டரிகளில் இருந்து காரீயத்தை (Lead) பிரித்தெடுக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 9 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு வருவாய்த் துறை, காவல் துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

விபத்தில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கவும், அவரது உடலை அரசு செலவில் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், படுகாயமடைந்த 3 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்த 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version