இந்தியத் திரையுலகில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்கள் மூலம் மக்களிடம் நீங்கா இடம் பிடித்த நடிகர் பிரதீப் ராவத் (74) காலமானார்.
அவருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தநிலையில், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொலைக்காட்சித் தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் பிரதீப் ராவத். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கஜினி’ மற்றும் அதன் இந்தி ரீமேக்கில் மிரட்டலான வில்லனாக நடித்துப் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். அஜித்தின் வீரம் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
அமீர்கானின் ஆஸ்கர் பரிந்துரை பெற்ற ‘லகான்’ திரைப்படத்தில் ‘தேவா’ என்ற துணிச்சலான சிப்பாய் கதாபாத்திரத்தில் நடித்து தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல நூறு படங்களில் இவர் நடித்துள்ளார்.
நடிகர் பிரதீப் ராவத் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
