பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினி காந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், எஸ்.ஜானகியின் தேன் போன்ற இனிமையான குரல் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்விக்கட்டும்; அவர் அமைதியில் துயில்கொள்ளட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்க முடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில்

கானக் குயிலே காலமானாயா?

அரைநூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா?

‘சிங்கார வேலனே தேவா’வில் நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய கீதவாணியே முடிந்துவிட்டதா உன் மூச்சு?

தாய்மையாய் தமிழாய் காதலாய் கருணையாய் கண்ணீராய் புன்னகையாய் எங்கள் வாழ்வோடு கலந்த பாட்டரசி உனக்கும் மரணமா?

‘நாதம் என் ஜீவனே’ என்றாயே உன் நாதம் இருக்கிறது ஜீவன் இல்லையே

சிரித்த முகமும் சிவப்பு நிலாப் பொட்டும் ஆடாமல் அசையாமல் சித்திரம் பாடுவதுபோல் செவ்வாய் அசைக்கும் அழகும் கண்களை விட்டுக் காணாமல் போகுமோ!

நீ பாடமுடியாத பாடலென்று எதுவும் இல்லை உன் பாடல் கேளாமல் இரவுகள் விடிவதில்லை

கண்ணதாசன் எழுதி நீ பாடிய பல்லவி கொண்டே புகழ்வணக்கம் செலுத்துகிறேன்

‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால் உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்’

வாழ்க நீ அம்மா!

என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version