சென்னை தலைமைச் செயலகத்தில் தீக்குளிப்பு உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தீ விபத்து தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் அளித்த புகார்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க வருகின்றனர். இதில் சிலர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக திடீரென தீக்குளிப்பு போன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மனு அளிக்க வந்த பெண் ஒருவர் குடிநீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்து, முதலமைச்சர் தனிப்பிரிவு வளாகம் அருகே தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமைச் செயலகம் போன்ற உயர் பாதுகாப்பு வளாகத்திற்குள் எரிபொருளுடன் நபர் ஒருவர் வந்தது பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண் இன்று திடீரென தனது சேலையில் தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் தீயை அணைக்க முயன்றனர். போதுமான உபகரணங்கள் இல்லாத நிலையில், பெண் காவலர்கள் சிலர் கைகளால் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தலைமைச் செயலக பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து முதலமைச்சர் தனிப்பிரிவு நுழைவுப் பகுதியில் தீயணைப்பு வீரர் ஒருவர் நிரந்தர பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் கார்பன் டை ஆக்சைடு தீயணைப்பான், தண்ணீர் வாளிகள் மற்றும் தீயை அணைக்க பயன்படுத்தப்படும் ஈரத் துணிகள் உள்ளிட்ட அவசரகால உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தலைமைச் செயலகத்திற்குள் வரும் பொதுமக்களை முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
