பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. திமுகவுடன் முதல்முறையாக இணைந்துள்ளது தேமுதிக.இது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணிகள் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தரப்பில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிறு சிறு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இரு தரப்பும் முட்டி மோதி வந்த நிலையில் எந்த கூட்டணியிலும் சேராமல் இருந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் பிப்ரவரி 19ம் தேதியான இன்று திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. காலை சுமார் 10 மணியளவில் அண்ணா அறிவாலயம் வந்த கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைத்துள்ளார். தேமுதிக யாரோடு இணையப்போகிறார்கள் என்ற கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது.

இதையடுத்து முதல்வரை சந்தித்துவிட்டு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “திமுக கூட்டணியில் இணைந்ததில் மகிழ்ச்சி. 2016-லேயே அமைய வேண்டிய கூட்டணி தற்போது அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு கேப்டன் அவர்களின் விருப்பம் நிறைவேறியுள்ளது. தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கான தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் குறித்து முதல்வர் அறிவிப்பார்” என கூறியுள்ளார்.

மறுபுறம், தனது X பக்கத்தில் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர், “சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் தொடங்கப்பட்ட தேமுதிக முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. 2006 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக, 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதையடுத்து நடந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக்கூட்டணி என்ற புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், அது தோல்வியை தழுவியது.

இதையடுத்து நடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒன்றிலும் வெல்லவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக, 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதனையடுத்து ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுக தங்களை ஏமாற்றிவிட்டதாக மனக்கசப்பில் இருந்த தேமுதிக தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதுவரை நடந்த எந்த ஒரு தேர்தலிலும் திமுகவுடன் சேராமல் இருந்த தேமுதிக தற்போது கூட்டணி அமைத்துள்ளது.

இக்கூட்டணியின் வாயிலாக தேமுதிகவுக்கு பலன் கிடைக்குமா? தேமுதிக உள்ளே வந்ததால் தொகுதிப்பங்கீட்டில் ஏற்படும் குழப்பம் மற்றும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்கும் கட்சிகளை எப்படி சமாளிக்கப்போகிறது திமுக? என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version