கேரள மாநிலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக, உலகப் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மூன்றாவது நாளாகக் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல மொழிகளில் திரைப்படங்கள் ஷூட்டிங் நடத்தப்பட்ட இந்த அழகிய அருவிப் பகுதிக்குத் தினசரி வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அங்குச் செல்ல வனத்துறையினர் தற்காலிகத் தடை விதித்துள்ளனர்.

தொடர் மழையின் தாக்கத்தால் மலைப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மளுக்கப்பாறை, பன்னிமேடு, சோலையார் மற்றும் மோட்டார் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைக்கூட்டங்கள், சிறுத்தைகள், கரடிகள் மற்றும் புலிகள் அதிக அளவில் இடமாற்றம் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக யானைகள் கூட்டம் கூட்டமாகத் தேயிலைத் தோட்டங்களுக்குள் உலா வருவதால், தோட்டத் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

வனத்துறையினரும், வேட்டைத் தடுப்புக்காவலர்களும் அப்பகுதிகளில் சுழற்சி முறையில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யாரும் காட்டு யானைகளைக் கண்டால் அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ, செல்ஃபி எடுக்கவோ அல்லது வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பகிரவோ கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version