மிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் கடந்த சில ஆண்டுகள், அப்போதைய ஆளுநரான ஆர்.என். ரவிக்கும் அன்றைய திமுக அரசுக்கும் இடையிலான கடுமையான போர்க்களமாகவே காட்சியளித்தன. மேசையைத் தட்டுவது, வெளிநடப்பு செய்வது, உரையைப் புறக்கணிப்பது என முட்டல் மோதல்களையே கண்டு பழகிய தமிழக சட்டப்பேரவை, இன்று முற்றிலும் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்திற்குச் சாட்சியாக நின்றது.

கடந்த மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது கூட்டத்தொடரான இன்று, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  ஆற்றிய உரை, மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே ஒரு ‘இணக்கமான வசந்த காலம்’ தொடங்கியுள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

ஆளுநர் மாளிகையின் நெகிழ்ச்சி

ஆளுநர் உரை முடிந்த சில மணி நேரங்களிலேயே சென்னை ராஜ்பவன் (LOK BHAVAN) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பு, இந்த இணக்கமான சூழலை அடியோடு உறுதிப்படுத்தியது. “தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள் இன்று” என ஆளுநர் அர்லேகர் தனது மனநிறைவை வெளிப்படையாகவே பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதற்கு மிக முக்கியக் காரணமாக இரண்டு அம்சங்கள் பார்க்கப்படுகின்றன. முதலாவது ஆளுநர் வாசித்த முழுமையான உரை.கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு, எந்தவிதமான கூச்சல், குழப்பம், பதாகை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இடையூறுகள் இன்றி ஆளுநரின் முழு உரையும் சட்டசபையில் வாசிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இரண்டாவது, இரண்டு முறை இசைக்கப்பட்ட தேசிய கீதம். இந்த முறை ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் ‘தேசிய கீதம்’ இசைக்கப்பட்டது. இதற்கு முன்பு திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய தேசிய கீத மரபுச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இது அமைந்திருந்தது.

ஆயினும், தவெக அரசு தனது பிராந்திய அடையாளத்தை விட்டுக்கொடுக்கவில்லை. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதன் பின்னரே தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மாநில தன்னாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய இரண்டையும் சமமாகப் பாவிக்கும் உத்தியை தவெக பின்பற்றியுள்ளதாக தெரிகிறது. “இது மக்கள் மாளிகைக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தி, மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டியுள்ளது” என ஆளுநர் பாராட்டியுள்ளார்.

கடுப்பான திமுக 

சட்டமன்றத்தில் அரங்கேறிய இந்த சுமுகமான சூழல், பிரதான எதிர்க்கட்சியான திமுக-விற்கு கடுப்பைக் கிளப்பியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த திமுக ஆட்சியில், ஆளுநர் உரை முழுவதும் படிக்கப்படவில்லை. ஆனால், இன்று ஆளுநர் உரை எந்த எதிர்ப்பும் இன்றி முழுமையாக வாசிக்கப்படுகிறது என்றால், தவெக-வுக்கும் பாஜக-விற்கும் இடையே உள்ள ரகசிய உறவு  வெட்டவெளிச்சமாகிவிட்டது” என மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தவெக தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து, “செந்தில் பாலாஜி உள்ளிட்ட முன்னாள் திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் ஆளுநர் நடவடிக்கைக்கு அனுமதி வழங்காததை சுட்டிக்காட்டி, “அப்படியானால் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே என்ன உறவு?” என எதிர்கேள்வி எழுப்பினார்.

ஆளுநருடன் இணக்கம் ஏன்?

ஆளுநருடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் இணக்கமாகச் செல்வதன் மூலம், மத்திய அரசால் வரக்கூடிய நிதிச் சிக்கல், நிர்வாக முட்டுக்கட்டைகளைத் தவிர்த்து, தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை எவ்வித தடையுமின்றி நிறைவேற்ற விஜய் திட்டமிடுகிறார். மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான இந்த இணக்கமான போக்கின் பின்னணியில், வெறும் நிர்வாக சுமுகத்தன்மை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியும் ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை, மாநிலத்தின் நிதிச் சூழல் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதைத் தெள்ளத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை வரலாறு காணாத வகையில் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுடன், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையும் ரூ.78,324 கோடி என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், மத்திய அரசின் நேரடி நிதிப் பகிர்வும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஒப்புதலும் இல்லாமல் புதிய தவெக அரசு தங்களின் மக்கள் நலத் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதை முதலமைச்சர் விஜய் நன்கு உணர்ந்துள்ளார்.

குறிப்பாக, தவெக அரசு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற பிரம்மாண்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்லாயிரக்கணக்கான கோடிகள் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஆனால், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் பெருமளவு சரிந்துள்ள சூழலில், ஜிஎஸ்டி (GST) இழப்பீடுத் தொகை, மாநிலங்களுக்கான கூடுதல் கடன் வாங்கும் வரம்பு மற்றும் மத்திய நிதிக் குழுவின் (Finance Commission) நிதிப் பகிர்வு ஆகியவற்றிற்கு மத்திய பாஜக அரசின் கனிவான பார்வை தவெக அரசுக்கு மிக அவசியமாகிறது.

மத்திய அரசுடன் தேவையின்றி மோதல் போக்கைக் கடைப்பிடித்தால், முந்தைய ஆட்சிக்காலத்தைப் போல நிதி விடுவிப்பில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு, மாநிலத்தின் அன்றாட நிர்வாகமே முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, ஆளுநரை அரவணைத்துச் செல்வதன் மூலம் டெல்லியுடன் ஒரு சுமுகமான உறவைப்பேணி, வரவிருக்கும் நிதியாண்டுக்கான மத்திய நிதியுதவிகளை எவ்வித தடையுமின்றிப் பெற்று, அதன்மூலம் மக்கள் மத்தியில் தங்களின் வாக்குறுதிகளைக் காப்பாற்றவே விஜய் இந்த இணக்கமான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இணக்கம் தொடருமா?

அதே சமயம், தவெக – ஆளுநர் இணக்கம் நீடித்தால், சிறுபான்மையினர் மற்றும் முற்போக்கு வாக்குகளைத் தவெகவிற்கு எதிராகத் திருப்ப ‘பாஜகவின் பி-டீம்’ (B-Team) என்ற முத்திரையைக் குத்த திமுக தீவிரமாக முயல்கிறது. ஆனால், செந்தில் பாலாஜி வழக்கை கையில் எடுத்து தவெக அதனைத் திறமையாக முறியடித்துள்ளது.

அரசியல் களத்தில் விமர்சனங்கள் ஒருபுறம் சுழன்றடித்தாலும், அரசாங்கத்திற்கும் ஆளுநருக்கும் இடையிலான இணக்கமான உறவு மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மோதல் அரசியலில் இருந்து இணக்க அரசியலை நோக்கி தவெக அரசு எடுத்து வைத்துள்ள இந்த முதலடி, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான நல்வாய்ப்பாக அமையுமா அல்லது புதிய அரசியல் சதுரங்க ஆட்டத்தின் தொடக்கமா என்பதை அடுத்தடுத்த நகர்வுகளே தீர்மானிக்கும்.

– பா. முகிலன்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version