கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சம்கல்ப் (Samkalp) ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் விஸ்வநாதன் அர்லேக்கர் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் ஐஏஎஸ் அகாடமி பயிற்சியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர், தமிழில் வணக்கம் என கூறி உரையை துவக்கினார்.
அவர் பேசுகையில், ‘சம்கல்ப் ஐஏஎஸ் நிறுவனத்தினர் வருங்காலத்தை எதிர்நோக்கி செயலாற்றுகிறார்கள். ‘விக்சித் பாரத் 2047’ என்ற இந்தியாவின் வளர்ச்சி இலக்கை அடைய அர்ப்பணிப்பும், உயர்ந்த மதிப்புகளும் கொண்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உருவாக்குவதில் சம்கல்ப் IAS அகாடமி முக்கிய பங்காற்றி வருவதாக பாராட்டினார்.
எமர்ஜென்சி காலத்தில் நான் ஜெயிலில் இருந்தேன். ஜாலியன் வாலாபாக் சம்பவம் நாம் அனைவரும் நன்கு அறிவோம். பிரிட்டிஷ்காரர்கள் கூறுவதை நாம் கேட்க வேண்டி இருந்தது. நாம் அடிமைகளாக இருந்தோம். தற்போது அவை மாறி இது நம் நாடு என மாறி உள்ளோம்.
IAS பயிற்சியில் நீங்கள் வித்தியாசமாக ஒவ்வொன்றையும் சிந்திக்க வேண்டும், நீங்கள் மக்கள் பணி ஆற்றுபவர்கள், அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
2047 வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது நாம் அனைவருடைய இலக்கு. அதை நோக்கியே நாம் செயல்பட வேண்டும்.
மேலும், யூபிஎஸ்சி (UPSC) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் இந்தியாவின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்றும், காலனித்துவ மனப்பான்மையை விலக்கி, நேர்மை, கருணை மற்றும் மக்கள் சேவை மனப்பான்மையுடன் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளில் பயன்படுத்த வேண்டிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது, சம்கல்ப் IAS அகாடமி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) தமிழக ஆளுநர் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் கல்வி ஒத்துழைப்பு, தலைமைத்துவ மேம்பாடு மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கான திறன் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட கல்வி நிறுவனத்தினர் மற்றும் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
