தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) கோலாகலமாக தொடங்கியது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டசபைக் கூட்டமாக இது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் நோக்கில் சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 5-ம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையின் வரைவு, புதிய அறிவிப்புகள், அரசின் உடனடி முன்னுரிமைத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் முதல் சட்டசபை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டசபை தொடங்கும். அந்த வகையில், சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, மற்றும் தேசிய கீதத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அதன் பின்னர் ஆளுநர் அர்லேகர் முதல் உரையை தொடங்கினார்.
சட்டமன்றத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிந்த பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் சமூகநீதி சர்வே என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னரும் காவிரி நீரை பெற தொடர்ந்து போராட வேண்டியுள்ளது; மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட நடவடிக்கை தொடரும்; நதிநீர் இணைப்புக்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; தமிழக அரசு தொடர்ந்து போராடி காவிரி நீரை பெற நடவடிக்கை எடுக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் என்பதில் உறுதியாக இருக்கிறது; மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதி சுமார் ரூ.3000 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்றும் மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் மத்திய அரசு மாநிலத்திற்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அர்லேகர் வலியுறுத்தினார்.
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்; நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க எந்த அரசு அனுமதி அளிக்கும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்; சென்னை நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஏற்க வேண்டும்; தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புதிய தொழில்கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்; தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்றார்.
அதுமட்டுமின்றி AI மூலம் அரசுத்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்; கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்; சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு செயல்படும்; இந்து சமய அறநிலையத்துறையின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் என்ற அர்லேகர் தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
