மேற்கு வங்காளத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தொடர்ச்சியான சவால்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பாருய்பூர் பகுதியில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அரசியல் மோதலையும் ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாருய்பூர் அருகே உள்ள சூர்யாபூர் பகுதியில் வசித்து வந்த 12 வயது சிறுமி, சனிக்கிழமை (ஜூலை 4) தனது தோழியின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கச் சென்றபோது காணாமல் போனார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், போலீசாருக்கு புகார் அளித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். நான்கு பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது.

நேற்று காலை உள்ளூர் மக்கள் ஒரு சந்தேக நபரைப் பிடித்து விசாரித்தபோது, சிறுமியின் உடல் மறைக்கப்பட்ட இடத்தை அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். பாருய்பூர் அருகே உள்ள குளத்தின் ஓரத்தில் சாக்குப் பையில் மறைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. உடல் நிலை குறித்த விவரங்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கான சான்றுகளை உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாருய்பூர்-ஜெய்நகர் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். டயர்களை எரித்து, போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தினர். இதில் ஒரு சந்தேக நபர் (26 வயது) பொதுமக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் பாஜக நிர்வாகி ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது கலிகாட் இல்லத்துக்கு முன்பு ஏராளமான போலீசார் மற்றும் மத்திய படைகள் குவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மம்தா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறிய திரிணாமுல் காங்கிரஸ், அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் “#JusticeForBaruipur” என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என மம்தா உறுதியாக இருப்பதாகக் கூறியது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். “பெண்கள் பாதுகாப்பை வாயால் பேசும் பாஜக, இத்தகைய சம்பவங்களில் அமைதி காக்கிறது. குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக” குற்றம் சாட்டினார். பாஜக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி விரைவில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version