மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், உலக எரிபொருள் வர்த்தகத்தின் முக்கிய நரம்பான ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே நடைபெறுகிறது. இந்த பின்னணியில், சரக்குக் கப்பல்களை மீண்டும் பாதுகாப்பாக இயக்குவதற்காக ஓமன் மற்றும் ஈரான் இடையே ஒரு முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி உறுதிப்படுத்தியுள்ளார்.
புதிய ஒப்பந்தத்தின்படி, வழக்கமாக வளைகுடாவிற்குள் செல்ல ஓமன் எல்லையிலும், வெளியேற ஈரான் எல்லையிலும் இருந்த இரு தனித்தனி பாதைகளுக்குப் பதிலாக, ஈரானிய பிராந்தியக் கடலுக்குள் அமைக்கப்பட்ட ஒரே ஒரு பாதை மட்டுமே தற்காலிகமாக பயன்படுத்தப்படும். இந்த ஏற்பாடு இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை நடைமுறையில் இருக்கும். இரு நாடுகளும் இந்த பாதையின் துல்லியமான புவியியல் எல்லைகளை இறுதி செய்துள்ளன.
இதன்படி, பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் வர்த்தகக் கப்பல்களைப் பரிசோதித்து கண்காணிக்கும் அதிகாரம் ஈரானுக்கு கிடைக்கிறது.இருப்பினும், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீது விதித்துள்ள கடற்படை முற்றுகை நீக்கப்படாத வரை, இந்த வழியில் கப்பல்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்பதே அதன் நிலை. மேலும், ஹார்முஸ் வழியே செல்லும் சரக்குக் கப்பல்களின் மதிப்பில் 5 முதல் 7 சதவீதம் வரை சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஓமன் தரப்பு 3 சதவீத கட்டணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், அமெரிக்கா எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படக் கூடாது என்ற நிலையைக் கடைப்பிடிக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்பட வேண்டும்; இல்லையெனில் ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்” என எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ஈரான் தரப்பு அமெரிக்காவுடன் நேரடியாக எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும், ஓமனுடன் மட்டுமே பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி சுமார் 21 கடல் மைல்கள் அகலம் கொண்ட மிகக் குறுகிய பகுதியாகும். சர்வதேசக் கடல் சட்டங்களின்படி, அதன் ஒரு பகுதி ஈரானிய எல்லைக்குள்ளும் மற்றொரு பகுதி ஓமன் எல்லைக்குள்ளும் வருகிறது. எனவே, புதிய கடல்வழிப் பாதையை உருவாக்கவோ அல்லது போக்குவரத்தை சீரமைக்கவோ ஓமனின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.
அரபு நாடுகளில் ஓமன் தொடர்ந்து நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றி வருவதால், ஈரான் மேற்கத்திய நாடுகளுடன் நேரடியாகப் பேச விரும்பாத போது, ஓமன் மூலமாகவே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இந்த உடன்பாடு உலக எண்ணெய் சந்தையில் தற்காலிக நிவாரணம் அளிக்கக்கூடும் என்றாலும், அமெரிக்க-ஈரான் மோதல் தொடரும் வரை ஹார்முஸின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படாது என்பதே தற்போதைய நிலை.
