இந்தியாவில் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான விமான எரிபொருள்   விலை இன்று (ஜூலை 1) முதல் லிட்டருக்கு சுமார் 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, டெல்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை 110 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் தணிந்துள்ளதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதாலும் இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த இயக்கச் செலவுகளில், எரிபொருள் செலவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்ததால், விமான நிறுவனங்கள் தங்களது பயணக் கட்டணத்தை உயர்த்தியிருந்தன. தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதால், இது விமான நிறுவனங்களுக்குப் பெரும் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், இந்த லாபத்தை விமான நிறுவனங்கள் பயணிகளுக்குக் கட்டணக் குறைப்பு மூலம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், விமானக் கட்டணங்கள் என்பது எரிபொருள் விலை மட்டுமல்லாது, பயணிகளின் தேவை, வழித்தடங்களின் செலவு (Route economics) மற்றும் பிற இயக்கச் செலவுகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, விமான நிறுவனங்கள் இந்த எரிபொருள் விலை குறைப்பின் பலனைப் பயணிகளுக்குக் கட்டணக் குறைப்பு மூலம் அளிக்கும் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த விலை திருத்தத்துடன், வணிக ரீதியிலான சமையல் எரிவாயு  சிலிண்டர் விலையும் ரூ.183.50 குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version