ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் ஆள்சேர்ப்பு முகவாரிகளுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது மாலுமிகளின் பாதுகாப்பை முன்னிறுத்திய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
கடல்சார் போக்குவரத்துக்கான தலைமை இயக்குநரகம் (Directorate-General of Shipping) தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. “அடுத்த உத்தரவு வரும் வரை” ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களிலும் இந்தியக் கடல்சார் பணியாளர்களை (Seafarers) நியமிக்கக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை உலகப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமான கடல் பாதையாகும். அமைதிக் காலங்களில் உலகின் தினசரி எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்தை இந்த நீர்வழி தாங்கிச் செல்கிறது. பாரசீக வளைகுடாவை உலக சந்தைகளுடன் இணைக்கும் இந்தச் சிறிய நீரிணை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகால போட்டியின் களமாகவும் உள்ளது. சமீப நாட்களில் இப்பகுதியில் தொடர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) உள்ளிட்ட அமைப்புகள் வணிகக் கப்பல்களுக்கு உயர் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தியா உலக அளவில் இரண்டாவது பெரிய மாலுமிகள் வழங்கும் நாடாகத் திகழ்கிறது. சுமார் 3,10,000-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் உலகின் பல்வேறு வணிகக் கப்பல்களில் பணியாற்றி வருகின்றனர். பிலிப்பைன்ஸ் ஏற்கெனவே தன் மாலுமிகளை இப்பகுதிக்கு அனுப்புவதை நிறுத்தியிருந்த நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்திய தாக்குதல் சம்பவங்கள்கடந்த 12-ம் தேதி ஓமன் கடற்பகுதியில் ஈரானின் தடையை மீறி ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த GPS Galaxy என்ற கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றது.
இதில் 23 பேர் கடலில் குதிக்க நேரிட்டது. அவர்களில் 10 இந்திய மாலுமிகள் உள்பட 22 பேர் மீட்கப்பட்டனர். மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த 30 வயதான ஹெராம் கர்மார்கர் உட்பட ஒரு இந்திய மாலுமி மாயமானார். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது.இதேபோல், நேற்று முன்தினம் இரண்டு அமீரகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொரு இந்திய மாலுமி உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்: இந்திய கடல்சார் நிர்வாக இயக்குநரகம் (DGMA) வெளியிட்ட சுற்றறிக்கை எண் 36/2026-ல் பல முக்கிய அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பாதுகாப்புக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். வழிசெலுத்தல் எச்சரிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ISPS கோட் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அவசர நிலையில் IFC-IOR மற்றும் DG தகவல் தொடர்பு மையத்தை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாறிவரும் பாதுகாப்புச் சூழலை இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்திய மாலுமிகளின் உயிர் மற்றும் நலனைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் DGMA தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய கப்பல் தொழிலில் இந்தியாவின் முக்கிய பங்கைப் பாதுகாக்கும் அதேவேளையில், மாலுமிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதிப்படுத்துகிறது.
