மியான்மர் கடற்கரையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் (UNHCR) மற்றும் சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) கவலை தெரிவித்துள்ளன.
இரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற இரண்டு படகுகள் அண்மையில் மியான்மர் கடற்கரையில் கவிழ்ந்திருக்கலாம் என்ற தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட தகவலின்படி, ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ராகைன் மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு படகுகளும் புறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானோர் ரோஹிங்கியா அகதிகள் என்றும், சிலர் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் அகதி முகாம்களில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 250 பேரை ஏற்றிச் சென்ற முதல் படகு, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது. 280 பேருடன் சென்ற மற்றொரு படகு, ஜூலை 8-ஆம் தேதி மியான்மரின் அயேயார்வாடி (Ayeyarwady) கடற்கரை அருகே மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு படகுகளிலும் மொத்தம் 530-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபரங்களை உறுதிப்படுத்தும் பணியில் இருப்பதாகவும் UNHCR தெரிவித்துள்ளது.
இந்த விபத்து உறுதிப்படுத்தப்பட்டால், 2026-ஆம் ஆண்டில் மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் உயிரிழந்த அல்லது மாயமான ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டும் என ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் சுமார் 300 பேர் உயிரிழந்ததாக அல்லது மாயமானதாக பதிவாகியுள்ளது.
மேலும், பாதுகாப்பான வாழ்க்கையை நாடி தப்பிச் செல்லும் மக்களின் துயரத்தை பயன்படுத்தி செயல்படும் மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்களின் ஆபத்து தொடர்ந்து நீடிப்பதை இந்த சம்பவம் மீண்டும் வெளிப்படுத்துவதாகவும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
உயிரிழப்புகளைத் தடுக்க, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை வலுப்படுத்துதல், அகதிகளுக்கு பாதுகாப்பு மற்றும் புகலிடம் வழங்குதல், மனிதக் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றில் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஐ.நா. அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
