அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நடைமுறையில் உள்ளதைப் போல, தமிழகத்திலும் உணவகத்துடன் இணைந்த மதுபான கூடங்களை (Resto-Bars) அனுமதிப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே பார்கள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்பைக் குறைத்துவிட்டு, முறையான உணவக வசதிகளுடன் கூடிய ‘ரெஸ்டோ பார்’ முறையைக் கொண்டு வருவதன் மூலம், பொது இடங்களில் மது அருந்துவதால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும், தரமான மதுபான அனுபவத்தை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாற்றத்திற்கான முக்கியக் காரணமாக அரசுத் தரப்பில் வருவாய் பெருக்கம் முன்வைக்கப்படுகிறது. தற்போதுள்ள FL2 மற்றும் FL3 போன்ற மதுபான விடுதிகளுக்கு மதிப்பு கூட்டு வரி இல்லாத சூழலில், புதிய ‘ரெஸ்டோ பார்’ முறைக்கு அனுமதி அளிக்கும்போது, முறையான மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்த முடியும். இதன் மூலம் அரசின் வருவாய் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போதுள்ள பார்களுக்கான உரிமங்கள் காலாவதியான நிலையில், அடுத்தகட்ட உரிமங்கள் மற்றும் புதிய டெண்டர் நடைமுறைகளில் இந்த ‘ரெஸ்டோ பார்’ கொள்கை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
