அதிக எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி விலக்கை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை ஊக்குவித்து, கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலக்கப்பட்ட பொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய கலால் வரி (Excise Duty) விலக்கை மேலும் நீட்டித்து அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை எரிபொருள் துறை மற்றும் உயிரி எரிபொருள் (Biofuel) உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மேற்காசியப் பகுதியில் நிலவும் அரசியல் பதற்றமும், தொடரும் போர் மோதல்களும் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியை பாதித்து வருகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகள் பெரும் சவாலை எதிர்கொள்கின்றன. இந்தியா தன் மொத்த எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இதனால் வெளிநாட்டு செலாவணி பெரும் அளவில் செலவாகிறது. இந்தச் சூழலில் அரசு உள்நாட்டு உயிரி எரிபொருள் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் இறக்குமதி சார்பைக் குறைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு முக்கிய அங்கமாக பெட்ரோலில் எத்தனால் கலப்பு (Ethanol Blending) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் உள்நாட்டு எத்தனால் உற்பத்தியை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். மத்திய அரசு நிர்ணயித்த 20 சதவீத எத்தனால் கலப்பு (E20) இலக்கை காலக்கெடுவுக்கு முன்பாகவே எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்தியாவின் உயிரி எரிபொருள் கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், E20 திட்டத்தைத் தாண்டி மேலும் உயர் அளவு கலப்பை நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் வேகமெடுத்துள்ளன. 22 சதவீதம், 25 சதவீதம், 27 சதவீதம் மற்றும் 30 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு (E22, E25, E27, E30) வழங்கப்படும் மத்திய கலால் வரி விலக்கை அரசு தொடர்ந்து நீட்டித்துள்ளது. இந்த வரிச்சலுகை உயிரி எரிபொருள் உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உள்நாட்டு எத்தனால் உற்பத்தி அதிகரிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான வெளிநாட்டு செலவை கணிசமாகக் குறைக்கவும் இது உதவும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலுக்கான அனைத்து வரிகளும் முறையாகச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அதோடு, கலப்புக்குப் பயன்படுத்தப்படும் எத்தனாலுக்கு பொருந்தும் ஜிஎஸ்டி வரியும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு, இந்தியாவின் நீடித்த வளர்ச்சி இலக்குகளான சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. எத்தனால் உற்பதியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்றவற்றில் தொழில் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
