அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் உச்சகட்ட பதற்றத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் பாதுகாப்பு படைகள் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடிவிடுவோம் என்று பதிலடி கொடுத்துள்ளன.

கடந்த மாதம் 17ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வளைகுடா பிராந்தியத்தில் சற்று அமைதி நிலவத் தொடங்கியது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபத்தில் மூன்று கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்த அமைதியை சிதைத்துவிட்டன. ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே கப்பல்கள் செல்ல அனுமதிப்பதாகவும், அதை மீறுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவங்களால் கோபமடைந்த அமெரிக்கா, ஈரானின் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் துறைமுகம் பெரும் சேதத்தை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. ஈரான் பக்கம் இருந்தும் பதிலடி தாக்குதல்கள் நடைபெற்றன.

இந்நிலையில், டிரம்ப் அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக அறிவித்தது. மேலும், “கார்க் தீவை முழுமையாக கைப்பற்றுவோம்” என்று மிரட்டியுள்ளார். இதற்கு பதிலாக ஈரான் பாதுகாப்பு வட்டாரங்கள், “அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவோம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட ஏற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்தப் புதிய வழித்தடத்தையும் அனுமதிக்க மாட்டோம்” என்று தெளிவுபடுத்தியுள்ளன.

உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. இந்த ஜலசந்தி மூடப்பட்டால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை பெரும் உயர்வை சந்திக்கும். பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதுகுறித்து கூறுகையில், “நாகரிகமும் துணிச்சலும் மிக்க ஈரான் மக்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளால் பேசுவது அவர்களின் மகத்துவத்தை எள்ளளவும் பாதிக்காது. நாங்கள் தரக்குறைவான பேச்சுக்கு அதே மொழியில் பதிலளிக்க மாட்டோம். மாறாக, அச்சமின்றி, துணிவுடன் செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்போம்” என்றார்.

இந்த மோதல் மத்திய கிழக்கு முழுவதும் புதிய போர் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் இந்தப் பதற்றத்தை தணிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புகளும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version