தமிழே தெரியாதவரை தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதற்கு தமிழக பாஜக தலைமை நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பதிவில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த திரு. கே. வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? அன்னைத் தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாச்சாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்?

சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தைச் சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் திரு. டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரைப் பிரதிநிதியாக நியமிக்கக் காரணம் என்ன? முதல்வர் விஜய் அவர்கள் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரஸின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் பேசி மேகதாது அணைப் பிரச்சனையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?

மாற்று சக்தி என்று கூறி, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு திரு. ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்!

இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version