தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருப்பாரா அல்லது ஆளுநர் இருப்பாரா என்ற விவாதத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ள கருத்து புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம், பல்கலைக்கழக வேந்தர் பதவி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், “எங்களது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், கொள்கை ரீதியான முடிவுகளை முதலமைச்சரே எடுப்பார். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நடைமுறைகளை நாங்களும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயம் எங்களுக்குக் கிடையாது.

முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதல்களைப் பரிசீலித்து முறைப்படுத்துவார். முதலமைச்சரின் ஆலோசனையின்படி இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றார்.  அதாவது, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற சட்டப் பூர்வ நிலைப்பாடு எடுக்கப்பட்டது. இதனால் அப்போதைய அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நீண்டகாலமாக அதிகார மோதல் நீடித்து வந்தது. இந்தச் சூழலில், முந்தைய அரசின் அந்த கொள்கை முடிவை தற்போதைய அரசு பின்பற்ற வேண்டியதில்லை என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பதுதான் தற்போதைய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

https://x.com/WriterRavikumar/status/2059520333963723241

அமைச்சரின் இந்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் தனது ‘எக்ஸ்’  பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை” என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராட்டிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் இதை முதலமைச்சர் விஜய்யின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

மாநில உரிமை சார்ந்த இந்த முக்கிய விவகாரத்தில் ஆளுங்கூட்டணிக்குள்ளேயே முரண்பட்ட கருத்துகள் வெளியாகி வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version