இந்தியாவின் ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம் உள்ளிட்ட முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பணியை விட்டு விலகுவதை கட்டுப்படுத்தும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முக்கிய விண்வெளித் திட்டங்களில் திறமையான மனிதவளத்தை தக்கவைத்துக் கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 14-ஆம் தேதி விண்வெளித் துறை (Department of Space) வெளியிட்ட உள்துறை சுற்றறிக்கையின்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் அளிக்கும் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு (Voluntary Retirement) கோரிக்கைகள் இனி வழக்கம்போல் ஏற்கப்படாது.

மேலும், இதுவரை இஸ்ரோ மைய இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு விண்ணப்பங்களை ஏற்கும் அதிகாரமும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அளவிலான உயர்நிலை பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

தற்போது ககன்யான் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விண்வெளித் திட்டங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திட்டங்களின் தொடர்ச்சியை உறுதி செய்தல், நிபுணத்துவம் வாய்ந்த மனிதவளத்தை பாதுகாத்தல் மற்றும் பணிகளில் இடையூறு ஏற்படாமல் தடுப்பதே இந்த புதிய நடவடிக்கையின் நோக்கம் என விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.

அண்மையில் விஞ்ஞானிகள் பணியை விட்டு வெளியேறியிருப்பது உண்மை என்றாலும், ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் திட்டமிட்டபடி தொடர்ந்து முன்னேறி வருகின்றன; அவற்றில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version