கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத்துக்கான ஆணையை நீட்டித்திருப்பது தவெக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருப்பதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி விமர்சித்துள்ளார்.

எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,  கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று, ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல எனக் கூறியுள்ளார்.

அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தைக் கைவிட வேண்டும் என தவெகவின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றிய அரசின் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் செயல்படும் இந்த தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும் எனக் கடிந்துரைத்துள்ளார்.

இதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க  கால அவகாசத்தை நீட்டி தவெக அரசு அரசாணை பிறப்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, மக்களின் உடல்நலத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும்  அச்சுறுத்தலாக கருதப்படும் இத்திட்டத்திற்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். .

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இதே திட்டத்தைச் சுட்டிக்காட்டி நாசகார, நச்சுத் திட்டங்களை கைவிட வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றிய தவெக, ஆட்சிக்கு வந்த  50 நாட்களில் அத்திட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கன்னியாகுமரி மக்களுக்கு  இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமன்றி, தவெக அரசு மக்களுக்கான அரசு அல்ல என்பதையும்   புரியவைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version