காரைக்குடி அரசுப் பள்ளியில் அமைச்சர் வருகையின் போது மாணவர்களைக் கொண்டு அரசியல் கோஷம் எழுப்பப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கனிமவளத் துறை அமைச்சர் டி.கே. பிரபு காரைக்குடியில் உள்ள ஓர் அரசுப் பள்ளிக்கு ஆய்வுக்காகச் சென்றபோது, மாணவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு ‘டிவிகே… டிவிகே… டிவிகே’ எனக் கோஷமிடச் சொல்லப்பட்டனர்.

அந்தக் கோஷத்தைக் கேட்டு ரசித்தபடி அமைச்சர் நடந்து சென்ற காட்சிகள் வீடியோவாகப் பதிவாகி வைரலாகியுள்ளன. இதைக் கண்டிக்காமல் அமைச்சர் கடந்து சென்றது பல தரப்பினரின் கடும் கண்டனத்தைத் தூண்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் அரசியல் தலையீடுகள் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

முன்னதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஒரு அரசுப் பள்ளியில் மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி, அவரது தயக்கத்தை ரீலாகப் பதிவு செய்து விமர்சித்த சம்பவம் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கட்சி நிர்வாகிகள் பள்ளிக்குள் நுழைந்து பாடங்களுக்கு இடையூறு செய்தனர். போலியோ சொட்டு மருந்து முகாமில் மக்கள் பிரதிநிதி அல்லாத ஒருவர் தலையிட்ட சம்பவமும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

இத்தகைய சம்பவங்களைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசியல் நோக்கங்களுக்காகப் பள்ளிகளுக்குள் யாரும் நுழையக் கூடாது எனத் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் இதுபோன்ற தலையீடுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் முதலமைச்சர் விஜய் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் அடுத்த நாளே இத்தகைய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது பதிவில், “அரசுப் பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் சொல்கிறார்? தனியார் பள்ளிகளில் இதைச் செய்வீர்களா? நீதிமன்றம் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பலரும் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசுப் பள்ளிகள் அரசியல் மேடைகளாக மாறக்கூடாது என்ற கருத்து பரவலாக வெளிப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version